‘பிக்பாஸ் 9’ தொகுப்பாளர் விஜய் சேதுபதி – அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக கருதப்படுவது ‘பிக்பாஸ்’. 2017 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நடத்தி வந்தார். இதன் முந்தைய சீசன்களில் ஆரவ், ரித்விகா, முகேன் ராவ், ஆரி அர்ஜுனன், ராஜு ஜெயமோகன், அசீம், அர்ச்சனா ரவிச்சந்திரன் போன்றோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

7 சீசன்களுக்கு பின், அரசியல் மற்றும் திரைப்பட பணி காரணமாக கமல்ஹாசன் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரது தனித்துவமான பாணி பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் 9-வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவார் என்று ஜியோஹாட்ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து ஜியோஸ்டார் தென்னிந்திய பிரிவு தலைவர் கிருஷ்ணன் குட்டி கூறியதாவது:

“இந்த முறையில், சமூக ஊடகங்களில் பிரபலமான சிலர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர். முந்தைய சீசன்களை நெல்சன் மற்றும் ‘அமரன்’ இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தனர். இம்முறை இயக்குநர்கள் பிரவீன் மற்றும் அர்ஜூன் இணைந்து இந்த நிகழ்ச்சியை இயக்குகிறார்கள்.

மேலும், ஹாட்ஸ்டார் மூலம் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள், நேரடியாக போட்டியாளர்களை பற்றி தங்கள் கருத்துகளை பகிரும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் பிக்பாஸ் 9, அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது” என தெரிவித்தார்.

Facebook Comments Box