நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கலுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி
படத்தில் நடிக்க வழங்கப்பட்ட ரூ.6 கோடி முன்பணத்தை திருப்பி செலுத்தாத வழக்கில், நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் மனு தாக்கலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வழக்கின் பின்னணி :
சென்னை பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவன இயக்குநர் பாலச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், “நிறுவனம் தயாரிக்க இருந்த இரண்டு படங்களில் நடிக்க, கடந்த ஆண்டு செப்டம்பரில் ரவி மோகனுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல் படத்துக்கு ரூ.15 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.6 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது.
ஆனால் ஒப்பந்த விதிகளின்படி எங்கள் படத்தில் நடிக்காமல், அவர் பிற தயாரிப்புகளில் நடித்துவிட்டார். இதனால் வழங்கப்பட்ட ரூ.6 கோடியை திருப்பித் தரும்படி கேட்டோம். ஆனால் அவர் தொகையை திருப்பி செலுத்தாமல், தற்போது தனது சொந்த நிறுவனம் மூலம் புதிய படத்தை தயாரித்து வருகிறார். எனவே, அந்த தொகையை வட்டியுடன் மீட்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
முன்னதாக நடந்த விசாரணை :
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியனும், நடிகர் ரவி மோகன் சார்பில் வழக்கறிஞர் கார்த்திகைபாலனும் ஆஜராகினர். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், ரூ.6 கோடிக்கான சொத்து உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ரவி மோகனுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இன்றைய உத்தரவு :
ஆனால், அவர் சொத்து பட்டியலை தாக்கல் செய்யாத நிலையில், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர், “நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார். எனவே எங்களுக்குச் செலுத்த வேண்டிய ரூ.6 கோடி பாக்கிக்காக அவரது சொத்துகளை முடக்கும் மனு தாக்க அனுமதி வழங்க வேண்டும்” என்று கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அப்துல் குத்தூஸ், நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் மனுவை தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.