‘கூலி’க்கு யு/ஏ சான்று கோரும் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு – வாதம் என்ன?

நடிகர் ரஜினி நடித்து வெளியான ‘கூலி’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்கக் கோரி தாக்கிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

‘ஏ’ சான்றிதழ் பெற்றதால் 18 வயதுக்கு கீழானவர்கள் படத்தை பார்க்க முடியவில்லை என்பதனால், படத்திற்கு யு/ஏ சான்று வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட சன் டிவி நெட்வொர்க் வழக்கு தாக்கியிருந்தது. வழக்கு நீதிபதி தமிழ் செல்வி முன் விசாரணைக்கு வந்தது.

சன்டிவி நெட்வொர்க் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “எந்த தமிழ் படங்களிலும் அதிகப்படியான சண்டை காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மது காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன” என்று வாதிட்டார்.

சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஏ சான்றிதழ் முதலில் ஏற்றுக் கொண்ட படக்குழு தற்போது யு/ஏ சான்றிதழ் கோரி வழக்கு தாக்கியுள்ளனர். படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கும் விவகாரம் அனைத்து குழுக்களும் சேர்ந்து ஒருமனதாக முடிவு செய்தது. வன்முறை காட்சிகளை நீக்கி யு/ஏ சான்று கோர வேண்டும்” என வாதிட்டார்.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Facebook Comments Box