“என் குழந்தைக்கு தந்தையாக மாதம்பட்டி ரங்கராஜ் பொறுப்பு ஏற்க வேண்டும்” – ஜாய் கிரிசில்டா
“என் வயிற்றில் வளரும் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ். அவர் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவியான ஜாய் கிரிசில்டா, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பிரபல உணவு தயாரிப்பு மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கான உணவு வழங்கும் மாதம்பட்டி ரங்கராஜ், என்னையும் என் குழந்தையையும் நீதிமன்றத்தில் வரவழைத்துள்ளார். என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர் தான் காரணம். அதற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக நான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பல்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றி அனுப்பி என்னை அவதிப்படுத்துகின்றனர். என் குழந்தைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். மாதம்பட்டி ரங்கராஜ் தான் என் குழந்தையின் தந்தை என்பதை ஏற்று பொறுப்பேற்க வேண்டும்” என ஜாய் கிரிசில்டா வலியுறுத்தினார்.