“கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மனதை உலுக்கியது” – நடிகர் மம்மூட்டி இரங்கல்

கரூரில் நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் சம்பவம் தன்னைக் கடுமையாக வருத்தமடையச் செய்ததாக நடிகர் மம்மூட்டி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 40 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

“கரூரில் நடந்த துயரச் சம்பவம் எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து உறுதியுடன் நிற்க பிரார்த்திக்கிறேன்” என மம்மூட்டி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும், திரைத்துறையிலிருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், பவன் கல்யாண், விஷால், கார்த்தி, ரவி மோகன், கங்கனா ரனாவத், இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் ஆகியோரும் தங்களது இரங்கலை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம், தமிழக அரசு ரூ.10 லட்சம், தவெக சார்பில் ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box