ரஜினியை நினைத்து எழுதப்பட்ட கதை தான் ‘ட்யூட்’: இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ட்யூட்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை புதிய இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் முன்பு சுதா கொங்காராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.
‘ட்யூட்’ பற்றி பேசும் போது கீர்த்தீஸ்வரன் கூறியதாவது:
“இந்தக் கதையை எழுதும்போதே, ரஜினி சார் 30 வயதிருந்தால் இந்த வேடத்தில் எப்படியிருப்பார் என்ற எண்ணத்தோடு கதை வடிவமைத்தேன். அதிலேயே பிரதீப் ரங்கநாதன் சரியாக பொருந்திவிட்டார். அவருக்கும் கதை மிகவும் பிடித்ததால் உடனே ஒப்புக் கொண்டார்.”
அவர் மேலும் கூறினார்:
“படத்தில் பிரதீப், மமிதா இருவரும் ஒரு ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தும் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முழுமையாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. காதல் கதை மட்டுமல்லாமல் அதில் ஒரு மாஸ் அம்சமும் உள்ளது; அது திரையரங்கில் புரியும். என் அறிமுக படம் தீபாவளிக்கு வெளியாகிறது என்பது என் கனவு நனவாகியதுபோல் உள்ளது.”
நாயகி மமிதா பைஜு குறித்து அவர் கூறினார்:
“இந்தப் படத்திற்காக மமிதாவை தேர்வு செய்தபோது, அவரது ‘பிரேமலு’ படம் கூட வெளிவரவில்லை. ‘சூப்பர் சரண்யா’ படத்தில்தான் அவரை பார்த்து தேர்வு செய்தேன். மமிதா கதையில் இணைந்ததும், ரஜினி–ஸ்ரீதேவி இணைந்து நடித்தால் எப்படியிருக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது.”
அவர் தொடர்ந்து கூறினார்:
“படத்தின் காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் அனைத்திலும் நாங்கள் பெரும் உழைப்பை எடுத்துள்ளோம். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார், அவரது பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இளம் தலைமுறையினர் இணைந்து உருவாக்கிய படம் என்பதால் இதை ‘ஜென் Z படம்’ என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது இளைஞர்களும் குடும்பத்தாரும் ரசிக்கும் வகையில் முழுமையான எண்டர்டெயின்மென்ட் படம்.”
படத்தில் பிரதீப் மற்றும் மமிதாவுடன் சரத்குமார், ரோகிணி, ‘பரிதாபங்கள்’ டேவிட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
“பிரதீப்பிடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இதில் இருக்கும். படம் பார்த்தபின் அதை நீங்கள் சொல்லுவீர்கள்,” என்று கீர்த்தீஸ்வரன் கூறினார்.