சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஓய்வு..எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணம்

0
 

சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரச்சார களைப்பை போக்குவதற்காக ஓய்வெடுத்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மட்டும் தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கடந்த 6 மாதங்களாக சட்டமன்றத் தேர்தலுக்காக களப்பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஒரு வழியாக கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிவடைந்து ஓட்டு எண்ணிக்கைக்காக பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சுட்டெரித்த கோடை வெயிலில் உடலை வறுத்தி பிரச்சாரம் செய்த தலைவர்களும், வேட்பாளர்களும், மே 2-ம் தேதி முடிவு வெளியாகும் என்பதால் இப்போது வீடுகளில் ஓய்விலிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பங்கேற்றிருக்கிறார். அதோடு மதுரை சென்ற அவர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, நாகர்கோவில், தேனி என அடுத்தடுத்து தொடர் பயணம் மேற்கொண்டார்.

நாகர்கோவிலில் பாஜக மகளிரணி நிர்வாகி ஒருவரின் கணவர் இறந்துபோனதால், அந்த நிர்வாகியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கையோடு தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கும் விசிட் அடித்திருக்கிறார் எல்.முருகன்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் அண்மையில் மறைந்த நிலையில் துக்கம் விசாரிப்பதற்காக அங்கு சென்றார் எல்.முருகன். அப்போது தேர்தல் முடிவுகள், எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்தும் அங்கு மனம் விட்டு பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here