நாங்க தான் சீனியர்…. வேண்டும் என்றால் அவர்கள் எங்களிடம் வரவேண்டாம்….. விஜய பிரபாகரன்

0
 

அமமுகவுடான கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி முடிவடைந்ததால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. அதிமுக கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளை வழங்காததால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக தேமுதிக கடந்த சில தினங்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தேமுதிக சேரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனோ, நாங்க தான் சீனியர் கமலுடன் கூட்டணி வைத்தால் எங்களுக்கு நல்லா இருக்காது என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் கெத்தா பேசினார். ஆனால், டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது.

அமமுகவிடம் நாம் கேட்கும் தொகுதிகள் கிடைக்கும் என்று தேமுதிக கணக்கு போட்டது. நுாறு சீட்டும், அதற்கு மேட்சாக தேர்தல் செலவு நிதியும் கேட்டபோது, ஆனானப்பட்ட மன்னார்குடி மன்னரே கொஞ்சம் ஆடிப் போனாராம். ’50 ‘சீட்’ தரோம்; ஆனா, ‘மேட்சிங்’ நிதியெல்லாம் தர வழி இல்லை’ என, சொல்லி இருக்கிறார். இதனால் அமமுகவுடான தேமுதிகவின் கூட்டணி பேச்சுவார்த்தை முறிந்து விட்டதாக தகவல்.



தற்போது கமல்ஹாசன் கட்சியுடன் வேண்டுமானால் தேமுதிக கூட்டணி வைக்கலாம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால், நாங்க சீனியர் கமல் ஜூனியர் அவருடன் கூட்டணி வைச்சா எங்க மானம், மரியாதை என்னாவது என்பது மாதிரி விஜய பிரபாகரன் வீர வசனம் ஏற்கனவே பேசியுள்ளார். இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் தேமுதிக கூட்டணி வைக்க வாய்ப்பில்லை. ஆக, 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.



மேலும், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடுவதற்குள் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர்களுக்கு படாதபாடு பட்டு விடுவார்கள் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் தனித்து விடப்பட்டுள்ள கேப்டன் கட்சி, தன் அங்கீகாரத்தை காப்பாற்ற, கடைசி முயற்சியாக, அறிவாலயத்துக்கு துாது அனுப்பி, பதிலுக்காக காத்திருந்தது. அங்கீகாரமும், சின்னமும் தங்க வேண்டும் என்றால் இந்த தேர்தலில், 6 தொகுதியாவது ஜெயித்தால்தான் சாத்தியம் என்பதால், ரொம்ப யோசித்து யோசித்து, வேறு வழி புலப்படாமல், தி.மு.க.,வுக்கே துாது அனுப்பினர். ஸ்டாலின் மருமகன், சபரீசனுடன் சுதீசும், மகன் உதயநிதியுடன் விஜயபிரபாகரனும் பேசி வந்தனர்.



6 சீட் ஜெயிக்கணும், அவ்வளவுதானே… 6 குடுத்துரலாம்’ என, ஸ்டாலின் சொல்லி இருப்பதை, மகனோ, மருமகனோ இன்னும் கேப்டன் தரப்புக்கு,’பாஸ்’ செய்யவில்லை. ஆகையால் மீண்டும் அதிமுகவுடன் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால், எல்.கே.சுதீஷ், விஜயபிரபாகரனின் வாய்க்கொழுப்பால் அதிமுக மனமிறங்கவில்லை. ஆகையால் மீண்டு அமமுகவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது தேமுதிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here