2022ஆம் ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் சென்றதால் விபத்துகளில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
டெல்லியில் கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை உலக பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் சாலைகளில் அத்துமீறல்கள் அதிகமாக உள்ளன. மீறுபவர்களுக்கு எவ்வளவு அபராதம்? அபராதத் தொகையை அரசு தொடர்ந்து உயர்த்த முடியாது. இதுதான் பிரச்சனை. இப்பிரச்னைக்கு தீர்வு காண, சாலையை பயன்படுத்துவோர் மனநிலையில் மாற்றங்களை கொண்டு வருவது அவசியம்.
சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறோம். மீறுபவர்களுக்கான அபராதத்தையும் அதிகப்படுத்தியுள்ளோம் ஆனால் பலனில்லை.
2019ல் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. அதன்படி அபராதம் அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகும் சாலை விதிமீறல்கள் அதிகரித்து வருகின்றன. சாலை விபத்துகளை சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது. வாகன ஓட்டிகளின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டவும். இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. 2022ஆம் ஆண்டில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளானதில் 50,029 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.