கோவை பீளமேட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
ஈஷா யோகாவில் பாஜக அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் சிவராத்திரி கொண்டாட்டங்களில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கோவை வந்தார்.
இந்நிலையில், இன்று கோவை பீளமேட்டில் நடைபெற்ற பாஜக மாவட்ட அலுவலகங்களின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது, கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.
புதிய மாவட்ட பாஜக அலுவலகக் கட்டிடம் 12,500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான இரண்டு மாடி கட்டிடம் மொத்தம் 15 அறைகளைக் கொண்டுள்ளது. 400 பேர் அமரக்கூடிய ஒரு அடல் அரங்கமும் அதில் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட புதிய மாவட்ட பாஜக அலுவலகங்களையும் அவர் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பலர் விழாவில் பங்கேற்றனர்.