அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டிருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, வீண் விளம்பரங்கள் மற்றும் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு அண்மைக் காலமாக தேவையற்ற பிரச்னைகளை தூண்டிவருகிறது என்றும், நடப்பாண்டுக்கான பட்ஜெட்டிலும் பொதுமக்களை கவரும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுவே திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் என்பதையே இது வெளிப்படுத்துவதாக அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், எந்த ஒரு முக்கிய பிரச்னைக்கும் தீர்வளிக்காத இந்த நிதிநிலை அறிக்கையின் தலைப்பாக “எவருக்கும் எதுவுமில்லை” என்று வைத்திருக்கலாம் என டிடிவி தினகரன் கேலியாக விமர்சித்துள்ளார்.