பலவீனமான பாஜக அரசு ஆகஸ்ட் மாதம் கவிழும் என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவன தின விழா நேற்று பாட்னாவில் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான ஆர்ஜேடி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆர்ஜேடி கட்சியின் நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய லாலு பிரசாத், எங்கள் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இங்கு ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன். இன்னொரு லோக்சபா தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு தொண்டர்கள் தயாராக வேண்டும். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இரு மாநிலக் கட்சிகள் கொண்ட பலவீனமான கூட்டணி ஆட்சி இது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த கூட்டணி அரசு கவிழும்.
எனவே, தொண்டர்கள் தேர்தல் பணிக்கு தயாராக இருக்க வேண்டும். இங்குள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி தனது கொள்கைகளில் இருந்து சமரசம் செய்து கொண்டு ஆட்சி மற்றும் அதிகாரத்திற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதன் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதில்லை.
இதற்கு முன்பும் இப்போதும் பாஜகவிடம் நாங்கள் பணிந்ததில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் குறைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் எங்கள் கட்சியின் செயல்பாடுகளை மறு ஆய்வு செய்தோம். எங்கள் கட்சி திருப்திகரமாக செயல்பட்டது. இன்று 4 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் இதைவிட அதிகமாகப் பெறுவோம். கடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 9 இடங்களில் வெற்றி பெற்றோம்.
லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பாஜக தலைமையிலான இரட்டை எஞ்சின் ஆட்சியில் ஒரு இயந்திரம் ஊழலை இயக்குகிறது என்று கூறினார். மற்றொன்று குற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆனால், பீகாரில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தொடர் பால விபத்துகள், கொலைகள் என நிதிஷ்குமார் அரசு என் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்களிடம் ஆதாரம் இருந்தால் என்னை கைது செய்யட்டும்.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக மட்டும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைந்தது.