ரேஷன் பொருட்கள் வீடு வீடாக சென்று விநியோகம்… புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு…!

0

புதுச்சேரி மாநிலத்தின் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சேர்ப்பதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அரசாங்கத்தின் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, சட்டமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கேள்வி நேரத்தின் போது பல்வேறு முக்கியமான விவகாரங்களை முன்வைத்தனர்.

இந்தச் சூழலில், புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் விவிலியன் ரிச்சர்ஸ் ஜான்குமார், மாநில அரசு வழங்கும் இலவச அரிசியை பொதுமக்களில் பெரும்பாலோர் பெறுவதில்லை என்றும், அது விநியோகத்தில் சிக்கல்கள் உள்ளன என்றும் கருத்து தெரிவித்தார்.

அவரது கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் என். ரங்கசாமி, புதுச்சேரி அரசு குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வீட்டுக்கே நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்தார். இது, நுகர்வோர் நேரம் செலவிடாமல், தேவையான அத்தியாவசிய பொருட்களை எளிதாகப் பெறக்கூடிய வகையில் உதவியாக இருக்கும் என்றும், இந்த நடைமுறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பான சேவை வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசாங்கம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் உணவு பொருட்கள் சீராக வழங்கப்படும் என்று உறுதியளித்த முதலமைச்சர், இந்த திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here