ஆடி மாத இறுதி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் பெருமளவில் தரிசனம்
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டதால், சென்னை மற்றும் சுற்றுவட்டார அம்மன் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி வெள்ளிகளில் பெண்கள் பெருமளவில் பொங்கல் சமர்ப்பித்து, பல்வேறு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபடுவது வழக்கம்.
இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலை முதலே அம்மன் கோயில்களில் பக்தர்கள் பெருமளவில் கூடினர். பெண்கள் பொங்கல் வைத்து, பால் குடம் எடுத்துச் சென்று, கூழ் வார்த்து, சில இடங்களில் அலகு குத்தியும் தங்கள் விரதங்களை நிறைவேற்றினர். எலுமிச்சை மாலைகள் சூட்டி, எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பிரார்த்தித்தனர்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், சூளை அங்காள பரமேஸ்வரி, கோலவிழியம்மன், பாரிமுனை காளிகாம்பாள், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன், முத்தமிழ்நகர் பவானியம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன. சில கோயில்களில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.
மேலும், பெருமாள் கோயில்களில் உள்ள மகாலட்சுமி சந்நிதியிலும் விசேஷ அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றன.