சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்
திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குடை உபய உற்சவ ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் கொடி ஏற்றி துவக்கி வைத்தார். திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது, தமிழகம் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மலர் மாலை மற்றும் வெண்பட்டு திருக்குடைகள் கருட சேவைக்காக சமர்ப்பிக்கப்படும்.
அதன்படி, திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் – விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு இணைந்து, ஒவ்வொரு ஆண்டும் திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு அழகிய வெண்பட்டு திருக்குடைகளை ஊர்வலமாகக் கொண்டு சென்று சமர்ப்பித்து வருகின்றனர். அதேபோல், நடப்பு ஆண்டுக்கான திருக்குடை ஊர்வல தொடக்க விழா பூக்கடை சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கினார். விசுவ இந்து பரிஷத் வட தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் ரஞ்சித் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் 21 அழகிய திருக்குடைகள் பக்தர்கள் வழிபாட்டுடன் ஊர்வலமாகச் சென்று, செப்டம்பர் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோயிலிலும், மாலை 4 மணிக்கு திருமலை தேவஸ்தான அதிகாரிகளிடமும், தமிழக மக்கள் பிரார்த்தனைகளுடன் சமர்ப்பிக்கப்படும் என திருக்குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ஜி. ராமலிங்கம் தெரிவித்தார்.