சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் ‘ஆண்டவன் உத்தரவு’ – கண்ணாடிப் பேழையில் கடல்நீர் வைத்து சிறப்பு பூஜை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே அமைந்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், ‘ஆண்டவன் உத்தரவு’ எனப்படும் வழக்கத்தின் அடிப்படையில் நேற்று (அக். 4) கடல்நீர் வைத்து விசேஷ வழிபாடு நடைபெற்றது.

இந்த மலைக் கோயிலில், “ஆண்டவன் உத்தரவு” என்ற பெயரில் தனித்துவமான ஒரு வழிபாடு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இதில், பக்தர்களுக்கு கனவில் அருளிய பொருளை கண்ணாடிப் பேழைக்குள் வைத்து பூஜை செய்யும் மரபு நிலவி வருகிறது.

முருக பக்தர்கள் கூறுவதாவது: “சிவன்மலை முருகன் தன் பக்தரின் கனவில் தோன்றி, எந்த பொருளை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று அறிவிப்பார். அந்த பொருள் தான் பின்னர் ‘ஆண்டவன் உத்தரவு’ எனக் கருதப்படும். அதன்படி கண்ணாடிப் பெட்டிக்குள் பொருள் வைக்கப்படுகிறது” என தெரிவித்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்டம் மணியகாரம்பாளையம் இடிகரைப் பகுதியைச் சேர்ந்த பக்தர் பவானி அவர்களின் கனவில் கடல்நீர் வைத்து பூஜை செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி, கடல்நீர் நேற்று காலை கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டு, அதற்கென சிறப்பு பூஜை நடைபெற்றது.

இவ்வாறான பொருட்கள் வைக்கப்படும் போதெல்லாம், அதனுடன் தொடர்புடைய ஏதாவது நிகழ்வு நடைபெறும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.

கடந்த மார்ச் 6-ஆம் தேதி பிரம்பும் சூடமும் அந்த பேழையில் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. அதற்குப் பிறகு, சுமார் ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு இம்முறை கடல்நீர் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டது. அடுத்த முறை எந்தப் பொருள் வைக்கப்பட வேண்டும் என்பது மற்றொரு பக்தரின் கனவில் முருகன் அருள்வது வரை தீர்மானிக்கப்படாது.

Facebook Comments Box