வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளை வெளிக்கொண்டு வர வேண்டும் – ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுரை

நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு, இதுவரை வெளியிடப்படாத கையெழுத்து பிரதிகளின் பதிப்புகளை வெளிக்கொண்டு வர இக்கால அறிஞர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறிவுறுத்தியுள்ளார்.

பாரம்பரிய குருகுல முறையில் ஆறு ஆண்டுகள் நீடிக்கும் 16 தேர்வுகளைக் கொண்ட தெனாலி சாஸ்திர பரீட்சையை வெற்றிகரமாக முடித்த 12 சாஸ்திர அறிஞர்களை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பாராட்டி, ஆசி வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயங்களை பாதுகாப்பதில் சிறந்து விளங்கிய அறிஞர்களின் அர்ப்பணிப்பையும் திறமையையும் கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சால்வை, சான்றிதழ், வெகுமானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் அனுக்கிரஹ பாஷணம் வழங்கிய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியதாவது:

“விரிவான பாடத்திட்டம் மற்றும் தேர்வு அமைப்புக்காகப் பெயர் பெற்ற தெனாலி சாஸ்திர பரீக்‌ஷா சபை, பாரம்பரிய சாஸ்திர சம்பிரதாயங்களை கற்று தேர்ச்சி பெறும் மாணவர்களை ஊக்குவிக்கிறது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க இந்த சபை வழங்கும் பயிற்சி, அறிஞர்களுக்கு மிகுந்த வாய்ப்புகளைத் திறக்கிறது. சாஸ்திரங்களைப் பற்றிய ஆழமான ஆய்வு ஒருவரை தூய்மையான மனநிலையில் நற்செயல்களைச் செய்ய வழிநடத்துகிறது.

நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு வெளிவராமல் உள்ள கையெழுத்துப் பிரதிகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றை வெளியிடும் முயற்சியில் இக்கால அறிஞர்கள் ஈடுபட வேண்டும். சாஸ்திரக் கல்வியின் உண்மையான நோக்கத்தை புரிந்து, அதன் பாரம்பரிய வடிவத்தைப் பேணிக் காப்பது அறிஞர்களின் கடமை. இதனைப் பின்பற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள்.”

மேலும், சாஸ்திர அறிவை சமூக நலனுக்காகவும் தர்ம பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்துவதன் அவசியத்தையும் சுவாமிகள் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் காஞ்சி பல்கலைக்கழக வேந்தர் குடும்ப சாஸ்திரி, துணைவேந்தர் ஜி. ஸ்ரீநிவாசு, திருப்பதியின் தேசிய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக துணைவேந்தர் ராணி சதாசிவமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வேத விற்பன்னர் ஸ்ரீ ராம்லால் சர்மா மேற்கொண்டார்.

Facebook Comments Box