‘அவரை வளர விடுங்கள்; அழுத்தம் வேண்டாம்’ – யாமல் குறித்து ரொனால்டோ ஓபன் டாக்!

0

நாளை நடைபெறவுள்ள யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் போர்த்துகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதவிருக்கின்றன. இந்நிலையில், ஸ்பெயின் அணியின் 17 வயது இளம் நட்சத்திரம் லாமின் யாமல் பற்றி போர்த்துகல் அணியின் தலைவன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்டம் குறித்து தற்போது “ரொனால்டோ மற்றும் யாமல்” என்ற தலைப்பில் பெரும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் உருவாகி உள்ளது. இருவரும் தங்களது அணிகளுக்காக அரையிறுதி ஆட்டங்களில் ஒரு கோல் வீசி முக்கிய பங்கு வகித்தனர். போர்த்துகல், ஜெர்மனியை, ஸ்பெயின், பிரான்ஸை முறையே வீழ்த்தி இறுதிக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொனால்டோ கூறியதாவது:

“ஸ்பெயின் உலகில் மிகச் சிறந்த தேசிய கால்பந்து அணிகளில் ஒன்று. விளையாட்டில் ஒரு தலைமுறையைச் சேர்ந்த வீரர்கள் வலிமையாக உருவெடுப்பதும், மற்றொரு தலைமுறை மெல்ல விலகுவதும் சகஜமான ஒன்றாகும். நீங்கள் என்னை பழைய தலைமுறையைச் சேர்ந்தவனாக கருதினால், அதில் எனக்குப் பிரச்சனை இல்லை.

ஊடகங்கள் பெரும்பாலும் ஓர் ஆட்டத்தை இருவரின் மோதலாக மாற்றி காட்டும். ‘ரொனால்டோ vs யாமல்’ எனவும், ‘ரொனால்டோ மற்றும் மற்றொருவர்’ எனவும் கூறுவர். ஆனால், என்னுடைய பார்வையில், ஒரு ஆட்டம் என்பது எப்போதும் இரு அணிகளுக்கிடையிலான மோதல்தான்.

யாமல் பற்றி நீங்கள் அதிகம் பேசுகிறீர்கள், அது சரிதான். ஏனெனில் அவர் திறமைசாலி. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இருப்பினும், நான் ஸ்பெயின் அணியின் முழுமையான திறனைக் குறித்து பேச விரும்புகிறேன். அந்த அணியில் நிக்கோ வில்லியம்ஸ், மிட்ஃபீல்டில் பெத்ரி, மற்றும் பயிற்சியாளராக லூயிஸ் ஆகியோர் உள்ளனர். இந்த அணி மிக வலுவாக அமைந்துள்ளது.

ஊடகங்களிடம் எனது ஒரே வேண்டுகோள் – யாமல் ஒரு இளம் வீரர். அவரை சுதந்திரமாக வளர விடுங்கள். அவர்மீது தேவையற்ற அழுத்தங்களை உருவாக்காதீர்கள். அவர் மேலும் சிறந்த ஆட்டம் காண்பிப்பார். இயற்கையான முறையில் வளர உத்தமமான சூழ்நிலை தேவை. அது தான் கால்பந்து விளையாட்டுக்கே நன்மை பயக்கும். அவர் சிகை அலங்காரம் சுவாரசியமாக உள்ளது. என் மகனை விட அவர் மூன்று வயது மட்டுமே பெரியவர்,” என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், 2019-ல் போர்த்துகல் மற்றும் 2023-ல் ஸ்பெயின் அணிகள் நேஷன்ஸ் லீக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதற்கிடையில், விரைவில் தொடங்கவுள்ள ஃபிபா கிளப் உலகக் கோப்பை தொடரில் தனக்கு பங்கேற்பது கிடையாது என ரொனால்டோ தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here