ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை முன்னிட்டு, கடந்த மாதம் 4-ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்து நடைபெற்றது. இந்த விழாவிற்காக மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இந்த கூட்ட நெரிசலின் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, கப்பன் பூங்கா காவல்துறையினர் ஆர்சிபி அணியின் நிர்வாகம், விழா ஏற்பாடுகளை செய்த டிஎன்ஏ நிறுவனம் மற்றும் கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆர்சிபியின் வணிகத் துறை மேலாளர் நிக்கோல் சோசலே, டிஎன்ஏ நிறுவனத்தின் துணைத் தலைவர் சுனில் மேத்யூ, வணிகத் துறையின் மற்றொரு நிர்வாகி கிரண் மற்றும் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் சுமந்த் ஆகியோர் கடந்த 6ஆம் தேதி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பெங்களூரு மத்திய சிறையில் வைத்திருக்கப்பட்டு வந்த நிலையில், அவர்கள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி எஸ்.ஆர். கிருஷ்ணகுமார் நேற்று விசாரித்தார்.
வாதங்களை கேட்டதற்கு பிறகு, நீதிபதி கூறியதாவது: “நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு யார் என்பது குறித்து அரசு இன்னும் தெளிவான விசாரணை மேற்கொள்ளவில்லை. சரியான ஆதாரமின்றி கைது செய்யப்பட்டுள்ளது என்பதும் புரிகிறது. எனவே, கைதான நான்கு பேருக்கும் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது” எனத் தீர்ப்பு வழங்கினார்.