அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு – வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து அஞ்சலி
அகமதாபாத் நகரை விட்டு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வியாழக்கிழமை (ஜூன் 12) மதியம் புறப்பட்ட சில நொடிகளிலேயே பயங்கர விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. லண்டன் நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில், ஒரே ஒரு நபர் மட்டுமே உயிர் தப்பினார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வால் பலரின் கனவுகள் நொறுங்கியது.
இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கலை தெரிவித்தனர். உலகத் தலைவர்களிலும் டொனல்டு ட்ரம்ப், புதின், ஷெபாஸ் ஷெரீப், ஸ்டார்மர் போன்றோரும் தங்கள் பங்குக்கு அனுதாபத்தைத் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு அஞ்சலியளிக்கும் வகையில், லண்டனில் நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணியினர் கருப்பு பட்டை அணிந்து ஆடியுள்ளனர். மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கும் முன், வீரர்கள் சுருட்டி நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தினர்.
282 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா முன்னேறி வருகிறது. வானிலை சீராக இருந்து, வெயிலின் தாக்கம் சிறிது உணரப்படுவதால் பேட்ஸ்மேன்களுக்கு இது சாதகமாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த பின்னர், தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா நம்பிக்கை வெளியிட்டார்.
இதனுடன் இணையாக, இங்கிலாந்துடன் வரவிருக்கும் டெஸ்ட் தொடருக்காக பெக்கன்ஹாமில் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய அணியின் வீரர்களும், கருப்பு பட்டை அணிந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.