அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) அனுசரணையுடன், மாநில அளவிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து போட்டிகள் ஜூன் 20 முதல் 29 வரை நடத்தப்பட உள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேசிய அளவிலான ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து போட்டிகள் ஜூலை 10 முதல் 31 வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய போட்டிக்கான தமிழக அணியை தேர்வு செய்யும் நோக்கில் மாநில ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆண்கள் ஜூனியர் போட்டிகள் சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்ட் பள்ளியின் “ஏ” மைதானத்திலும், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியின் “பி” மைதானத்திலும் ஜூன் 26 முதல் 29 வரை நடைபெறும்.
அதேபோல், பெண்கள் ஜூனியர் போட்டிகள் திண்டுக்கல் எஸ்டிஏடி “ஏ” மைதானத்திலும், திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பாலிடெக்னிக் கல்லூரியின் “பி” மைதானத்திலும் ஜூன் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாவட்ட அணிகள் தங்களது அணித் தகவல்களை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வீரர்கள், தங்களது அசல் பிறந்த தேதி சான்றிதழும், ஆதார் அட்டையும் கட்டாயமாக கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.