இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியின் முதல் டெஸ்ட், நாளை மறுநாள் லீட்ஸில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான பீல்டு நிலைமை குறித்து பீல்டு பராமரிப்பாளர் ரிச்சர்ட் ராபின்சன் கூறியதாவது:
பிட்ச் பொதுவாக வறண்ட தன்மையுடையதாகவே இருக்கும். அதனால், டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்து வீசுவதைத் தேர்வு செய்து, தொடக்க நாளில் காணப்படும் பவுலிங் சாதக சூழலை முழுமையாக பயன்படுத்த முனைவார்கள்.
தற்போது பிட்சை பார்க்கும்போது, வெளி புல்வெளியைப் போல் பச்சையாகவே இருக்கிறது. இருப்பினும், போட்டிக்கு முன் புல்கள் 8 மில்லிமீட்டர் நீளத்தில் வெட்டப்பட்டு விடும். லீட்ஸில் வெயில் அதிகமாக இருப்பதால் (22 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை), பிட்ச் அதிகமாக வறண்டுவிடாமல் இருக்க, தற்போதைக்கு மூடிவைக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முதல் நாள், பிட்ச் சிறிதளவு பவுன்ஸும் ஸ்விங்கும் தரும். அதே நேரத்தில், நேராக பந்தை டிரைவ் செய்யக்கூடிய வாய்ப்புகளும் இருக்கும். வெயிலின் தாக்கத்தால் பிட்ச் விரைவில் வறண்டு, சமநிலையான நிலைக்கு மாறும். எனவே, தொடக்க நாளில் கிடைக்கும் பவுலிங் உதவியைச் செயல்படுத்தும் நோக்கில், டாஸ் வென்ற அணி பவுலிங்கைத் தேர்வு செய்வதற்கான சாத்தியம் அதிகம்.
லீட்ஸில் நடைபெற்ற கடைசி 22 டெஸ்ட் போட்டிகளில் 16 முறைகள் டாஸ் வென்ற அணிகள் பவுலிங்கை முதலில் தேர்ந்தெடுத்துள்ளன. இங்கிலாந்து அத்தகைய போட்டிகளில் 9 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. அதேபோல், முதலில் பேட்டிங் எடுத்த அணிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளன.
இங்கிலாந்து இதே ஹெடிங்லியில், நியூஸிலாந்துக்கு எதிராக 4வது இன்னிங்ஸில் 296 ரன்களும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 251 ரன்களும் சேர்த்து வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸில் சராசரியாக அதிக ரன்கள் அடிக்க முடியாதபோதிலும், மிகவும் குறைந்த ரன்கள் மட்டும் வரும் பிட்சாகவும் இருக்காது. 250 முதல் 350 வரை ஓட்டங்கள் சாத்தியமானவை.
இந்திய அணிக்குச் சவாலாக இருக்கக்கூடிய விஷயம் என்னவெனில், சமீப காலமாக ஹெடிங்லியில் அவர்கள் விளையாடாததே. 2021-ல் இந்தியா இங்கு இன்னிங்ஸ் தோல்வியடைந்ததற்கு முன், 2002-ல் தான் கடைசியாக இங்கு ஆடியுள்ளது. அந்நேரம் கங்குலி தலைமையில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை சமமாக்கியது.
2002-ல் நடைபெற்ற அந்த டெஸ்ட் இன்று வரை நினைவில் உள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 628/8 என்ற பெரும் ஸ்கோரைப் பதிவு செய்தது. பாங்கர் 68, திராவிட் 148, டெண்டுல்கர் 193, கங்குலி 128 ரன்கள் எடுத்தனர். மேலும், ஒரு மாலை நேரத்தில் வெளிச்சக் குறைவால் ஆட்டத்தை நிறுத்தலாம் என அப்போதைய நடுவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் கங்குலி மறுத்து விளையாட தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார். அந்த நேரத்தில் சச்சினும், கங்குலியும் 10-11 ஓவர்களில் சுமார் 100 ரன்கள் குவித்து, டி20 பாணியில் விளாசினர்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான ஆண்ட்ரூ கடிக் (40 ஓவர் – 150 ரன்கள்), அலெக்ஸ் டியூடர் (36 ஓவர் – 146 ரன்கள்) ஆகியோர் மிகுந்த தாக்கம் சந்தித்தனர். பந்து வீச்சில் நான்கு வீரர்கள் சதமடைந்தனர். கங்குலி அந்நேரத்தில் அதுபோன்ற முடிவு எடுக்காமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு அந்த இன்னிங்ஸ் வெற்றியெல்லாம் கிட்டியிருக்காது. இங்கிலாந்து அப்போது 273 மற்றும் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இன்னிங்ஸ் தோல்வியடைந்ததோடு தொடரையும் இழந்தது.
அந்த டெஸ்ட்டில் அனில் கும்ப்ளே 7 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆட்ட நாயகன் ராகுல் திராவிட்.