சின்க்ஃபீல்ட் கோப்பை: குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா

சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த டி. குகேஷுடன் மோதினார். வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 36-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன் பிரக்ஞானந்தா நேரலை உலக தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார். அமெரிக்காவின் லேவோன் அரோனியன் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை 41-வது நகர்த்தலில் தோற்கடித்தார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு:

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த உள்ளது. இதற்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா நீக்கப்பட்டு, காயம் சரியாகிய வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்குர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ்,  சாரணி, யாஷ்டிகா பாட்டியா, ஸ்நே ராணா.

அல்கராஸ், ஸ்வியாடெக் சாம்பியன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்னாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் 3-ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியாடெக், இத்தாலியின் 7-ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவுலினியை எதிர்த்து 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் இறுதியில், முதல் நிலை வீரர் ஜன்னிக் சின்னர், இரண்டாம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். முதல் செட்டில் அல்கராஸ் 5-0 முன்னிலையில் இருந்தபோது, சின்னர் உடல் நலக்குறைவு காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

வெண்கலம் வென்றார் மனு பாகர்:

கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் 219.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். சீனாவின் கியான்கே மா 243.2 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம், கொரியாவின் ஜின் யாங் 241.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

சென்னையில் இன்று தேசிய சீனியர் தடகளம்:

தமிழ்நாடு தடகளம் சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 64-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் இன்று சென்னையில் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியில் நாட்டிலிருந்து சுமார் 700 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் 35 அணிகளில் இடம் பெற்று விளையாட உள்ளனர்.

இந்நிலையில், செப்டம்பர் 13-21 வரை ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படுகிறது. குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங், அன்னு ராணி; உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர்; டிரிப்பிள் ஜம்ப் வீரர் அப்துல்லா அபூபக்கர், கார்த்திக் உன்னிகிருஷ்ணன், முரளி சங்கர், அனிமேஷ் குஜ்ஜுர், அம்லான் போர்கோஹைன் உள்ளிட்ட தேசிய சாதனை படைத்த வீரர்கள் கலந்துகொள்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த டிரிப்பிள் ஜம்ப் வீரர் பிரவீன் சித்ரவேல், ஓட்டப்பந்தய வீராங்கனைகள் வித்யா ராம்ராஜ், அபினயா ராஜராஜன், ஏஞ்சல் சில்வியா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Facebook Comments Box