உலக வுஷு சாம்பியன்ஷிப்: இந்திய பெண்கள் 3 பேர் இறுதிக்குள் – ஆண்கள் பிரிவிலும் அசத்தல்
பிரேசிலில் நடைபெற்று வரும் 17வது உலக வுஷு சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் சிறப்பான சாதனை படைத்துள்ளனர். இதில் இந்திய மகளிர் அணியின் மூன்று வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் ஆண்கள் பிரிவில் இருவர் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
மகளிர் 52 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில், இந்தியாவின் அபர்ணா, இந்தோனேஷியாவின் தாரிசா டி ஃப்ளோரியன்டினாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார். தங்கப்பதக்க ஆட்டத்தில் அவர் வியட்நாமின் நிகோ தி பூங்காவை எதிர்கொள்கிறார்.
60 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் கரீனா கவுசிக், பிரேசிலின் நதாலியா பிரிக்வெசி சில்வாவை வென்றார். அவர் இறுதியில் சீனாவின் ஜியாவோ வெய் வூவுடன் மோத உள்ளார்.
75 கிலோ எடைப்பிரிவு அரைஇறுதியில், இந்தியாவின் ஷிவானி, ரஷ்யாவின் கேத்ரினா வல்சுக்கை தோற்கடித்து இறுதிக்கு முன்னேறினார். தங்கப்பதக்க ஆட்டத்தில் அவர் ஈரானின் ஷஹர்பானோ மன்சூரியன் செமிரோமியுடன் ஆட உள்ளார்.
ஆண்கள் பிரிவில், 56 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாகர் தஹியா மற்றும் 75 கிலோ எடைப்பிரிவில் விக்ராந்த் பாலியன் அரைஇறுதிக்குள் நுழைந்து தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளனர்.