ஆசியக் கோப்பை: பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றுப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக சஹிப்சதா பர்ஹான், சயீம் அயூப் களம் இறங்கினர். ஆனால் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் பந்திலேயே சயீம் அயூப் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட்டானார். அடுத்த ஓவரில் பும்ரா பந்துவீச்சில் முகமது ஹாரிஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் இழந்த பாகிஸ்தான் அணியில், பாகர் ஸமான், கேப்டன் சல்மான் ஆகா, ஹசன் நவாஸ், முகமது நவாஸ், சஹிப்சதா பர்ஹான், பஹீம் அஷ்ரப் ஆகியோர் பெரிய ஆட்டம் ஆட முடியவில்லை. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள், வருண் சக்ரவர்த்தி 1 விக்கெட் பெற்றனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 127 ரன்களிலேயே சுருண்டது.

வெற்றி பெற 128 ரன்கள் என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங்குக்கு இறங்கியது. அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். ஷுப்மன் கில் 10 ரன்களில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் 47 ரன்கள் (37 பந்துகள்), திலக் வர்மா 31 ரன்கள், ஷிவம் டூபே 10 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம், இந்திய அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் தரப்பில் சயீம் அயூப் மட்டுமே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Facebook Comments Box