அடுத்த பிசிசிஐ தலைவராக தேர்வாகும் மிதுன் மன்ஹஸ்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் மிதுன் மன்ஹஸ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மும்பை – வான்கடே மைதானத்தில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
அவர் மனு தாக்கல் செய்ததை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா உறுதி செய்தார். “மிதுன் என் முன்னிலையில் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளார்” என்றார். தற்போது பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் ஷுக்லா செயல்பட்டு வருகிறார்.
பிசிசிஐ தலைவராக இருந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதால் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிசிசிஐ சட்டப்படி, 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது. வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
இந்த சூழலில், மிதுன் மன்ஹஸ் அந்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளார். இவர் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளார். பிசிசிஐ பொருளாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரகுராம் பாட் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
யார் இந்த மிதுன் மன்ஹஸ்?
45 வயதான மிதுன், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். 1997–2017 வரை 154 முதல்-தர போட்டிகளில் விளையாடி 9,714 ரன்கள் எடுத்துள்ளார். 130 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 4,126 ரன்கள் மற்றும் 91 டி20 போட்டிகளில் 1,170 ரன்கள் எடுத்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகு, ஐபிஎல் அணிகள் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு துணை பயிற்சியாளர் பொறுப்பிலும், வங்கதேச இளையோர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
பிசிசிஐ துணை கமிட்டியில் அங்கம் வகிப்பவர் இவர். ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணிகளை பராமரித்து வந்த இவர், கடந்த சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பிசிசிஐ நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் அவரை முன்மொழிந்துள்ளனர்.