பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்: தங்கம் கைப்பற்றினார் ஷீத்தல் தேவி
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் பாரா உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில், மகளிர் காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவின் 18 வயது வீராங்கனை ஷீத்தல் தேவி 146-143 என்ற கணக்கில், உலகின் நம்பர்-1 வீராங்கனையான துருக்கியின் ஓஸ்னூர் க்யூர் கிர்டியை வீழ்த்தி தங்கப் பதக்கம் பெற்றார்.
அதேபோல், கலப்பு அணிகள் பிரிவில் தோமன் குமாருடன் இணைந்து ஷீத்தல் தேவி வெண்கலப் பதக்கம் வென்றார். இந்த ஜோடி, இங்கிலாந்தின் கிரின்ஹாம் – நேதன் மாக்குயின் ஜோடியை 152-149 என்ற கணக்கில் தோற்கடித்து வெற்றியடைந்தது. மேலும், மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் சரிதாவுடன் இணைந்து ஷீத்தல் தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் இவர்கள், துருக்கி ஜோடியிடம் 148-152 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர்.
உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார் ஷைலேஷ் குமார்: டெல்லியில் நேற்று தொடங்கிய உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், ஆடவர் உயரம் தாண்டுதல் டி42 பிரிவில் இந்திய வீரர் ஷைலேஷ் குமார் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
அதே போட்டியில் இந்தியாவின் வருண் சிங் பாத்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். பாராலிம்பிக் சாம்பியனான அமெரிக்க வீரர் எஸ்ரா ஃப்ரெச் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இருவரும் தலா 1.85 மீட்டர் உயரம் தாண்டினாலும், எஸ்ரா ஃப்ரெச் அதிக வாய்ப்புகளில் அந்த உயரத்தை கடந்ததால் அவர் வெள்ளியை பெற்றார்.