தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக அணிக்கு திருச்சியில் அன்பான வழியனுப்பு
30-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுப் போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் நரேன்பூரில் வரும் அக்டோபர் 1-ம் தேதி தொடங்கவிருக்கின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டி, ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவு – ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், கோவா.
‘பி’ பிரிவு – மணிப்பூர், உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, அசாம்.
தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் ஆடுகிறது. அடுத்ததாக அக்டோபர் 5-ம் தேதி மேற்கு வங்கத்துடனும், 9-ம் தேதி ஒடிசாவுடனும் மோதவுள்ளது. அனைத்து போட்டிகளும் ஆர்.கே.எம். ஆஷ்ரம மைதானத்தில் நடைபெறுகின்றன.
லீக் சுற்றுக்குப் பின், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிகள் அக்டோபர் 13-ம் தேதி நடைபெற, சாம்பியன் பட்டத்திற்கான இறுதிப் போட்டி அக்டோபர் 15-ம் தேதி நடைபெறும்.
இதற்காக தமிழக மகளிர் அணி நேற்று திண்டுக்கலிலிருந்து ரயிலில் சத்தீஸ்கர் புறப்பட்டுச் சென்றது. அப்போது அவர்கள் திருச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது, திருச்சி மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் சிறப்பு வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் பங்கேற்று அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.