டிராபி, பதக்கம் வழங்கப்படாத நிலையிலும் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி – முழு விவரம்

ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தான் வீரர்கள் ஓய்வறைக்குத் திரும்பினர். இந்திய வீரர்கள் பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக மைதானத்தில் இருந்தனர். சுமார் 90 நிமிடங்கள் கழித்தே பரிசளிப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்திய வீரர்களின் சில குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கேப்டன் சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மனைவி மற்றும் மகள்கள் மைதானத்தில் இருந்தனர், அனைவரும் உற்சாகத்துடன் இருந்தனர். அதே நேரத்தில், ஓய்வறைக்கு சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மைதானத்தில் வந்து சேர்ந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும், தொடரின் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடையே விருதுகளை பெற்றனர். இந்திய வீரர்கள் பதக்கங்களைப் பெற்ற போது, மேடையில் இருந்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோஷின் நக்வியும் இந்திய வீரர்கள் பரிசுகளை வாங்கும்போது கைதட்டவில்லை. தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியினர் பரிசுகளை வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புலிடமிருந்து பெற்றனர். தொடர்ந்து, மோஷின் நக்வி 2வது இடத்திற்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம் வழங்கினார்.

இந்த நிலையில் இந்திய அணிக்கு பதக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட இருந்தது. இதை மோஷின் நக்வி வழங்குவதாக இருந்தார். ஆனால் இந்திய அணி, மோஷின் நக்வியிடம் இருந்து டிராபியை பெறமாட்டோம் என தெரிவித்தது. இதனால் பரிசளிப்பு விழாவில் பரபரப்பு நிலவியது. மோஷின் நக்வியைத் தவிர மேடையில் இருந்த வேறு யாரிடமிருந்தும் கோப்பையைப் பெற இந்திய அணி தயாராக இருந்தது. இதனால் மேடையில் இருந்த துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி காலித் அல் ஜரூனி, இந்தியாவுக்கு ஆசியக் கோப்பையை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் மோஷின் நக்வி அதற்கு இணங்கவில்லை.

இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சைமன் டவுல், “இந்திய அணி தங்கள் பதக்கங்களையும் விருதுகளையும் இன்று இரவு பெறப்போவதில்லை” என்று அறிவித்து, பரிசளிப்பு நிகழ்ச்சி முடிந்தது. இதைத் தொடர்ந்து மோஷின் நக்வி மேடையில் இருந்து இறங்கி மைதான வெளியேறு வாயிலை நோக்கி நடந்தார். உடனடியாக, போட்டி அமைப்பாளர்கள் கோப்பையை விழா மேடையில் இருந்து எடுத்துச் சென்றனர், இதனால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன், விழா மேடைக்கு அருகே கூடி சிறிது நேரம் கொண்டாடினர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் கற்பனையாக கையில் கோப்பையை ஏந்தி சக அணி வீரர்களிடம் வழங்குவது போன்று பாவனை செய்து கொண்டாடினர். வெற்றிக் கோப்பை இல்லாத போதிலும் குழு புகைப்பட அமர்வும் நடைபெற்றது.

உண்மையான டிராபி எது?

பரிசளிப்பு விழா முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார், “நான் கிரிக்கெட் விளையாடி, வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறேன். என் கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களே இந்த தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்.”

ரூ.21 கோடி பரிசு:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.21 கோடி பரிசு வழங்கப்பட உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வலைதளத்தில், “ஆசிய கோப்பை சாம்பியன்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான பரிசுத் தொகை ரூ.21 கோடி” என தெரிவித்துள்ளது.

ரூ.28 லட்சம் நன்கொடை:

இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் தனது வலைப்பதிவில், “ஆசிய கோப்பை தொடரின் சம்பளத்தை உயிரிழந்தோரின் குடும்பத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் சர்வதேச டி 20 போட்டிக்கு ரூ.4 லட்சம் ஊதியமாகப் பெறுவர். இதனால் ஆசிய கோப்பையில் விளையாடிய ஏழு ஆட்டங்களுக்கு மொத்தம் ரூ.28 லட்சம் நன்கொடையாக வழங்கப்படும்.

தேவஜித் சைகியா கூறுவது:

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறினார், “டிராபியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரிடம் இருந்து பெறமாட்டோம் என்று முடிவு செய்தோம். அவர் பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவர். ஆனால் அதற்காக அவர், பதக்கங்களுடன் கோப்பையையும் எடுத்துச் சென்றிருக்கக் கூடாது. இது மிகவும் துரதிர்ஷ்டமானது. கோப்பையும் பதக்கங்களும் விரைவில் இந்தியாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று நம்புகிறோம். வரும் நவம்பரில் துபாயில் ஐசிசி கூட்டம் நடைபெறுகிறது. இதில் மோஷின் நக்விக்கு எதிராக வலுவான எதிர்ப்பை பதிவு செய்வோம்.”

‘அவமரியாதை’:

பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறினார், “இந்த தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல. அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் செய்த அவமரியாதை. வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி சூர்யகுமார் யாதவ் நடந்து கொள்கிறார்.”

Facebook Comments Box