மதுரையில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் – தோனி திறந்து வைத்தார்

மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று திறந்து வைத்தார்.

இந்நகரில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் உருவாக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றன. சர்வதேச போட்டிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மைதானம், இளம் விளையாட்டு வீரர்களின் திறன் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த மைதானத்தில் சர்வதேச தர வாய்ந்த பிட்ச், இரவை பகலாக்கும் மின்விளக்குகள், வீரர்களுக்கான நவீன அறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டு, வலைப்பயிற்சிக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், மீடியா மற்றும் விஐபி கேலரிகள், பெரிய அளவிலான பார்வையாளர் இருக்கைகள் ஆகிய வசதிகள் உள்ளன.

தோனி, திறப்பு விழாவில் பேசுகிறார்

மதுரையில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்புப் பெருமையுடன் பேசினார். அவருடன் வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் எம்.வி.முத்து ராமலிங்கம், எம்.வி.எம். வேல்மோகன், பள்ளிக்குழும இயக்குநர் கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.

மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படாத வகையில், மைதானம் மழை நின்ற 10 நிமிடங்களுக்குள் விளையாடுவதற்கேற்ப காயும் நவீன வடிகால் வசதி கொண்டுள்ளது. 20,000 பேர் அமரும் வகையில் கேலரி அமைக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 7,500 இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மைதான சுற்றுப்பகுதிகளை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய மைதானமாக மதுரையில் அமைந்த வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா, வேலம்மாள் கல்வி நிறுவனத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது.

தோனி அந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, உலகத் தரமான வசதிகளுடன் மைதானம் அமைந்துள்ளதாக தெரிவித்தார். எதிர்கால கிரிக்கெட் வீரர்களின் கனவுத்தளமாக இது திகழும் என்றும் கூறினார்.

வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் எம்.வி.முத்துராமலிங்கம், ‘‘கிரிக்கெட் ஜாம்பவான் எம்.எஸ்.தோனி மைதானத்தை திறந்து வைத்தது பெருமை அளிக்கிறது. திறமைக்கு தளம் வழங்கும் எங்கள் நோக்கம் இதனால் மேலும் வலுப்பெறும்’’ என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் வேல்மோகன், இயக்குநர் கார்த்திக் மற்றும் வேலம்மாள் பள்ளிகள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

‘மேக்கிங் சாம்பியன்ஸ்’ என்ற நோக்கத்தில் செயல்படும் வேலம்மாள் நிறுவனம் தற்போது விளையாட்டு உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. டி.என்.பி.எல், ஐ.பி.எல், ரஞ்சி கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடக்க கூடிய வகையில் கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது

Facebook Comments Box