தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, மணல்மேடு உள்ளிட்ட மலைவாசி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாம் சேவா பாரதி தமிழ்நாடு மற்றும் சேலம் ரீத்தம் மருத்துவமனை இணைந்து ஒருங்கிணைத்தது. இம்முகாமில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு, அப்பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு தேவையான ஆலோசனைகள் வழங்கினர்.
இலவச மருத்துவ முகாமின் முக்கிய அம்சமாக, மேல்சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பினர் செய்தனர்.
மேலும், ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் மருத்துவ வசதிகளுக்கு தூரமாக இருப்பதால், மலைவாசி பகுதிகளை நேரடியாக சென்று மருத்துவ உதவி செய்யும் திட்டம் பற்றி சேவா பாரதி அமைப்பினர் அறிவித்தனர். இத்திட்டத்தின் மூலம் அந்தந்த பகுதிகளில் அவசியமான மருத்துவ சேவைகளை வழங்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த முகாமின் மூலம் பலரை நோய் கண்டறிய உதவியதோடு, தொடர்ந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை பெறுவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தி வழங்கப்பட்டன. மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காக இதுபோன்ற மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைப்பினர் கூறினர்.