சசிகலா தொண்டர்களிடம் பேசி வரும் ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்று திரும்பிய சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில், திடீரென தொண்டர்களிடம் சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை தொண்டரிடம் செல்போனில் சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் தொண்டரிடம் சசிகலா நலம் விசாரித்து பேசுகிறார். பதிலுக்கு தொண்டர் நலம் விசாரித்து கட்சிக்கு தான் பணி யாற்றியது மற்றும் போராட்டங்களில் சிறை சென்றதும் குறித்து பேசியுள்ளார்.
மேலும், அந்த ஆடியோவில் சசிகலா பேசுகையில், “நான் நிச்சயமாக வருவேன். கட்சியை சரி செய்து அம்மா கொண்டு போன மாதிரி கொண்டு போக வேண்டும். தலைவர் காலத்தில் கட்சி எப்படி இருந்ததோ? அந்த மாதிரி செயல்பட வேண்டும். அதுபோல நிச்சயமாக செய்வேன். கவலைப்படாதீர்கள். விரைவில் அனைவரையும் சந்திப்பேன். நீங்கள் எல்லாம் ஆரம்ப காலத்தில் இருந்து உள்ளவர்கள். கட்சியை நல்லபடியாக கொண்டு செல்ல வேண்டும்” என்கிறார்.
இந்த ஆடியோவை தொடர்ந்து சசிகலா ஆதரவாளர்களிடம் பரபரப்பு நிலவி வருகிறது.