எம்பி தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி புது கணக்கு போட்டு வருகிறாராம்

0
கிட்டத்தட்ட ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விட்டதாகவே தெரிகிறது என்றும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி அமர்ந்தாலும், வேறு ஒரு திட்டத்தை மனதில் கொண்டே காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது..!

ஆட்சி போனால் எப்படியும் எடப்பாடி பழனிசாமி ஆட்டம் காண்பார்.. அதனால், பெரும்பாலான நிர்வாகிகள் தன்பக்கமே வந்துவிடுவார்கள் என்று ஓபிஎஸ் கணக்கு போட்டிருந்தார்..

ஓபிஎஸ் என்னவெல்லாம் நினைத்தாரோ, அதையேதான் சசிகலா தரப்பும் நினைத்தது.. இப்போது இவர்கள் இருவரின் கணக்கும் நொறுங்கி விட்டது.

அதிமுகவின் தோல்விக்கு எதையெல்லாம் லிஸ்ட் போட்டு ஓபிஎஸ் சொன்னாரோ, வேறு ஒரு சாதகமான லிஸ்ட்டை போட்டு ஓபிஎஸ் தரப்பை ஆப் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. இதையடுத்து ஓபிஎஸ் ஓரங்கட்டுப்பட்டு விட்டதாகவும், எடப்பாடி பழனிசாமியின் அடுத்த இலக்கு வேறாக இருக்கிறது என்றும் விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது:

“ஆரம்பத்தில் பொதுப்பணித்துறையை கேட்டிருந்தார் ஓபிஎஸ்.. அதையும் எடப்பாடி பழனிசாமி தரவில்லை.. பிறகு நெடுஞ்சாலை துறையை கேட்டிருந்தார்.. அதையும் தரவில்லை .. குறைந்தபட்சம் தன்னுடைய ஆதரவாளரான கேபி முனுசாமிக்கு கல்வி துறையில் முக்கிய பொறுப்பு கேட்கப்பட்டது. அதுவும் தரவில்லை.. கடைசியில் முனுசாமியே, எடப்பாடி பக்கம் சாய்ந்த பிறகுதான், அவருக்கு பொறுப்புகள் தரப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவர் பதவியானது, கிட்டத்தட்ட கேபினட் அந்தஸ்து உள்ள பதவி.. பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு, “நாங்க எவ்ளோதான் விட்டுத்தருவது? எதையாவது செய்துட்டு போங்க” என்று சலித்து கொண்டே ஓபிஎஸ் அன்றைய தினம் வெளியேறி சென்றுள்ளார்.. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ற ஒப்புதலுக்கு மன திருப்தியுடன்தான் ஓபிஎஸ் கையெழுத்துபோட்டாரா? அல்லது மறுபடியும் ஏதாவது பிரச்சனையை ஆரம்பிப்பாரா? அடுத்து என்ன செய்ய போகிறார்? என்ற ஆர்வம் எழுகிறது.

அதனால்,இவர்களின் பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது.. “என்னண்ணே.. கட்சிக்கும் நீங்களே தலைவர், எதிர்க்கட்சிக்கும் நீங்களே தலைவரா?” என்று எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்வியால் ஓபிஎஸ் அப்போதே அப்செட் ஆகி உள்ளார்.. இப்படித்தான் ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்தார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி தரப்பின் சமயோஜிதத்தால் ஓபிஎஸ் தரப்பால் பேச முடியவில்லை என்பதே உண்மை.

இன்னொரு பக்கம் அதிமுகவின் பலம் பெரிதாக அடிபடவில்லை என்பதில் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமல்லாமல் மொத்த அதிமுக நிர்வாகிகளுமே மகிழ்ச்சியில்தான் உள்ளனர். ஆட்சிதானே போயிருக்கு.. கட்சியின் அஸ்திவாரம் இன்னும் சீர்குலையவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சிதான் என்று அதிமுகவினர் சொல்கிறார்கள்.

அதை விட முக்கியமாக, மு.க.ஸ்டாலின் இதுவரை அதிமுக பக்கம் திரும்பவில்லை. கடுமையான நடவடிக்கை எதையும் அவர் எடுக்கவில்லை. அடுத்த ஒரு வருடத்திற்கு கொரோனாவின் கோரம் தொடரும் என்பதால் அவர் அதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் அதிமுகவை எதிர்த்தாலும் ஒரு மென்மை போக்கை கடைப்பிடிக்கிறார்.. இந்த நாகரீகமான அணுகுமுறை அதிமுகவுக்கு சாதகமானதும் கூட. கட்சியை பலப்படுத்த இதை நாம் திட்டமிடலாம்” என்று அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here