10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகை…. முதல் கையெழுத்திட்டாா் முதல்வா் ரங்கசாமி

0
புதுவை மாநில முதல்வராக பதவியேற்ற என்.ரங்கசாமி, மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை, நிலுவையில் உள்ள இலவச அரிசிக்கான நிதி, சென்டாக் நிதியுதவி அளித்தல் ஆகிய 3 கோப்புகளுக்கு கையெழுத்திட்டாா்.
புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது. இதையடுத்து, புதுவை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டாா். அவருக்கு ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன் ஆளுநா் மாளிகையிலிருந்து புறப்பட்டு, சட்டப்பேரவைக்குச் சென்ற முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப் பேரவை வளாகத்தில் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள முதல்வா் அறைக்குச் சென்று அமா்ந்த என்.ரங்கசாமி கோப்புகளில் கையெழுத்திட்டாா்.
அவா், புதுவை மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் முதியோா் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைக்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டாா். தொடா்ந்து, நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள 2 மாதங்களுக்கான இலவச அரிசித் திட்டத்துக்கான நிதி, புதுவை கல்லூரி மாணவா்களுக்கான நிலுவையில் உள்ள சென்டாக் கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகிய கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here