Daily Publish Whatsapp Channel


“என்னை விசாரிக்காமலே பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்வது எப்படி?” – டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி

“என்னிடம் விளக்கம் கேட்காத நிலையிலேயே, பணியிடை நீக்கம் செய்யத் தீர்மானிக்கப்படுவது எப்படிச் சரியாகும்?” என்று மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

“நான் மேலதிகாரிகள் மீது புகார் கொடுத்ததற்குப் பிறகே, எனக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் திரட்டப்படத் தொடங்கின. நான் தவறு செய்திருந்தேனெனில், அதற்கான நடவடிக்கை அதே நேரத்தில் எடுக்கப்பட வேண்டியது. ஆனால், அந்த நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதிலிருந்தே உண்மை தெரிய வருகிறது. இன்று யாரையாவது பிடிக்க விருப்பமில்லை என்றால், அவரை எதிர்பாராத விதமாக குற்றவாளியாக்கும் சூழ்நிலையே உருவாக்கப்படுகிறது. கைபட்டாலும் குற்றம், கால்பட்டாலும் குற்றமாக்கப்படுகிறது.

இப்போது என்னைச் சார்ந்த பல்வேறு குற்றச்சாட்டுகள், பாலியல் புகார்கள் என கூறப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. விசாரணை இல்லாமல், டிஐஜி என்னை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்வது எந்த நீதிக்குட்பட்டது?

இந்த நிலையில் என் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது. என்னால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, என் தந்தை உடல்நலக்குறைவால் தற்போது சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை நேரில் சென்று பார்ப்பதற்காக நான் மாவட்ட எஸ்பியிடம் அனுமதி கேட்டும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

நான் தற்போது மிகுந்த உளவியல் அழுத்தத்தில் இருக்கிறேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். சில அதிகாரிகள் தங்கள் சொந்த சுவாரஸ்யத்திற்காக நேர்மையாக செயல்படும் அதிகாரிகளை ஒடுக்க முயல்கின்றனர். நான் இன்று இந்த நிலைமையில் பேசுவதால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் நன்கு அறிந்துள்ளேன். ஆனால், நான் தவறே செய்திருந்தால், என்னை தூக்கிலேற்றத் தயங்க வேண்டாம்.

தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் சிறந்த அதிகாரி. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தவிதமான விசாரணையும் நடத்தப்படவில்லை. எனவே, தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்த பிரச்சனைக்கு தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வரும் இந்த விவகாரத்தில் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும்” என சுந்தரேசன் வலியுறுத்தினார்.


பின்னணி விவரம்: என்ன நடந்தது?

மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு தடுப்பு பிரிவில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டிஎஸ்பியாக சுந்தரேசன் பணியாற்றி வருகிறார். இவரது அரசுப் பயன்பாட்டு வாகனம், மாவட்ட காவல் தலைமையகம் வழியாக ஒரு அமைச்சருக்கு பாதுகாப்பு பணிக்காக கோரப்பட்டது. ஆனால், அதிகாரபூர்வ உத்தரவு இல்லாத காரணத்தால், அவர் வாகனத்தை வழங்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர் வெளியூர் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டதாகவும், அவருடைய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. வீடு முதல் அலுவலகம் வரை நடந்து செல்லும் அவரது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிஎஸ்பி, தன்னை நேர்மையுடன் செயல்படுவதற்காகவே ஒடுக்கப்படுகிறேன் எனக் கூறினார். மேலும், எஸ்.பி. வளைந்து கொடுத்து செயல்படச் சொன்னதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான அவரது அறிக்கையை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் மறுத்திருந்தார்.

இதையடுத்து, தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், டிஎஸ்பி சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய மத்திய மண்டல ஐஜிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Facebook Comments Box