இழப்பீடு வழங்காததால் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை
நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில் நியாயமான இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கோவை, கணபதி பகுதியைச் சேர்ந்த ஜி. ராமசாமி என்பவரின் 18 ஏக்கர் நிலம், 1989 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு திட்டத்திற்காக அரசு கையகப்படுத்தியது. ஆனால், அதற்கான ரூ.1.83 கோடி இழப்பீடு தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.
ஜி.ராமசாமி இறந்த நிலையில், அவரது வாரிசுகள் சார்பில் கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், கடந்த 17ம் தேதி நீதிபதி தனலட்சுமி தீர்ப்பளித்து, இழப்பீட்டு தொகைக்காக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மூன்று அலுவலகங்களில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவு வழங்கினார்.
இதையடுத்து, நீதிமன்ற அமீனா தலைமையிலான குழு, காவல்துறை பாதுகாப்புடன் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டது. மேலும், அலுவலக ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
பின்னர், இழப்பீடு தொகையை வரும் ஆகஸ்ட் 26க்குள் வழங்கப்படும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, ஜப்தி நடவடிக்கை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற குழுவினர் பின் வாங்கினர்.
இந்த ஜப்தி நடவடிக்கையால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில நேரத்திற்குப் பரபரப்பு நிலவியது.