பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு: குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்
தமிழ்நாடு பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணி தலைவர்கள் என மொத்தம் 51 பேர் கொண்ட நிர்வாகப் பட்டியலை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று அறிவித்தார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த குஷ்புவிற்கு, இந்த புதிய கட்டமைப்பில் மாநில துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், எம். சக்கரவர்த்தி, வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் பிளூதர், ஏ.ஜி. சம்பத், பால்கனகராஜ் உள்ளிட்டோர் இந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுகிறார்கள்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி, ஜெயப்பிரகாஷ், வெங்கடேசன், சுந்தர் ஆகியோர் புதிய மாநில துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, பொன்.வி. பாலகணபதி, பேராசிரியர் ராம. சீனிவாசன், எம். முருகானந்தம், பி. கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் மாநில பொதுச் செயலாளர் பதவியில் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
முன்னர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணியின் மாநிலத் தலைவராக இருந்த அமர் பிரசாத் ரெட்டிக்கு மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் மாநிலச் செயலாளர் பதவியில் தொடர்கிறார்கள். கதளி நரசிங்கபெருமாள், நந்தகுமார், ரகுராமன் ஆகியோர் மாநிலச் செயலாளர்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளைஞரணி மாநிலத் தலைவராக எஸ்.ஜி. சூர்யா, மகளிரணி தலைவராக கவிதா ஷங்கர், ஓபிசி அணிக்குத் தலைவராக வீர. திருநாவுக்கரசு, எஸ்.சி. அணிக்குத் தலைவராக பி. சம்பத்ராஜ், எஸ்.டி. அணிக்கு ஏ. சுமதி, சிறுபான்மையினர் அணிக்கு ஜான்சன் ஜோசப் ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். விவசாய அணி மாநிலத் தலைவராக ஜி.கே. நாகராஜன் தொடர்ந்து செயல்படுகிறார்.
மேலும், அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மாநில ஊடக பிரிவு அமைப்பாளர் ரங்கநாயகலு, மாநில அலுவலகச் செயலாளர் சந்திரன் ஆகியோர் தங்கள் நிலைபேறான பொறுப்புகளில் தொடருகின்றனர். முன்னர் துணைத் தலைவராக இருந்த நாராயணன் திருப்பதிக்கு மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆன்மிகப் பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நாச்சியப்பன் மற்றும் கே.டி. ராகவன் ஆகியோருக்கு மாநில பிரிவு அமைப்பாளர் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. இத்துடன், மாநில தகவல் தொழில்நுட்ப அமைப்பாளராக மகேஷ்குமார், சமூக ஊடக அமைப்பாளராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளனர்.