பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். அவருக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று காலை 7.50 மணிக்கு இந்திய விமான படைக்கு சொந்தமான தனி விமானத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்டு, 10.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர்.
இதனையடுத்து, தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடு தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, 11.15 மணிக்கு விழா நடைபெறும் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் வர உள்ளார்.
பின்னர், சென்னை, வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், சென்னை கடற்கரை அத்திப்பட்டு 4 வது வழித்தடம் மற்றும் விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஒரு வழிப்பாதை மின்மயமாக்குதல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே.1ஏ, பீரங்கி கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைக்க உள்ளார். மேலும், கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.