சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கனத்த இதயத்தோடும் கண்ணீர் வழியும் விழிகளோடும் உங்கள் முன் நிற்கிறோம். அம்மா அவர்களுக்கு இந்த பிறவி அல்ல; ஏழேழு பிறவி எடுத்தாலும் அவருக்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம்.
அவர் வகுத்த திட்டங்களால் பயனடைந்த மக்கள், நன்றியை ஒரு போதும் மறக்க மாட்டர்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அருகிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைத்திருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து, இது சாதாரண நினைவிடம் அல்ல; அம்மா அவர்களின் நினைவலைகள். அம்மா அவர்களுக்கு விசுவாசத் தொண்டர்கள் ஆகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அது தான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது.
தமிழகத்தில் தீய சக்திகள் தலையெடுத்து விடாமல் தடுக்க நாளும் நாளும் உழைக்க வேண்டுமென்று தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம் இது. மனித தெய்வம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வீர முழக்கம் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். இங்கு வரும் மக்களுக்கு வீரம் பிறக்கும் என்றார்.
நீங்கள் எங்களோடு இல்லை என்று கண்களில் கண்ணீர் பெருகுகிறது. நீங்கள் தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அதனால் தான் அம்மா ஆட்சி இன்னும் தொடருகிறது. என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறினார். அமைதி, வளம், வளர்ச்சி என தமிழகம் வெற்றி நடை போடுகிறது என்றும் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் நிகழ்ந்த சாதனைகளைப் பட்டியலிட்டார். பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இன்றைய நினைவு தின திறப்பு விழாவில் பங்கேற்றனர்.
The post இந்த பிறவி அல்ல… ஏழேழு பிறவி….. ஜெயலலிதாவிற்கு தீராத நன்றிக் கடன்…. ஓ.பன்னீர் செல்வம் பேச்சு appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box