வான்வழிப் போரை வெல்லும் இந்தியா: சீனாவும் அமெரிக்காவையும் மிஞ்சும் ‘காண்டீபம்’ ஏவுகணை!

வான்வழிப் போரை வெல்லும் இந்தியா: சீனாவும் அமெரிக்காவையும் மிஞ்சும் ‘காண்டீபம்’ ஏவுகணை!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), உலகத்தில் நீளமான ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை உருவாக்கி, சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. ‘மகாபாரதம்’ காவியத்தில் அர்ஜுனனின் வில்லுக்கு அஞ்சலியாக “காண்டீபம்” எனப் பெயரிடப்பட்ட Astra Mk 3 ஏவுகணை, தற்போது இந்திய விமானப்படைக்கு ஒரு வலுவான ஆயுதமாக உள்ளமைந்துள்ளது.

இந்திய விமானப்படையின் வான்வழி தாக்குதல் திறன் என்பது, தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சமாகத் திகழ்கிறது. கடந்த காலங்களில், இந்தியா பெரும்பாலும் ரஷ்யாவின் R-77, பிரான்ஸின் MICA மற்றும் இஸ்ரேலின் ஏவுகணைகளை நம்பிக் கொண்டு வந்தது.

ஆயினும், அவசர சூழ்நிலைகளில் ஏவுகணைகளை வழங்கும் நாடுகளின் துணை இல்லாத சூழலில் என்ன செய்யலாம்? என்ற சிந்தனையிலிருந்து, உள்நாட்டு ஏவுகணை உற்பத்தி கனவு தொடங்கப்பட்டது.

1990-ஆம் ஆண்டின் முற்பகுதியில், DRDO விஞ்ஞானிகள் இந்த முயற்சியில் களம் இறங்கினர். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், தற்போது உலகத் தரத்தில் மெருகேறிய பாதுகாப்பு திட்டமாக மாறியுள்ளது.

Astra Mk 1:

Astra ஏவுகணைத் தொடரின் முதல் தலைமுறை, Mk1, 3.6 மீ நீளமும் 154 கிலோ எடையுமுடையது. 100 கி.மீ தூரத்திலுள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. எதிரியின் விமானம் தப்பிக்க முயன்றால், அதைத் துரத்தி தாக்கும் தன்மை கொண்டது.

Astra Mk 2:

தொடர்ந்து, Astra Mk 2 145 கி.மீ. தூரம் சென்று தாக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டது. இதில் dual-pulse தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம், எதிரி விமானங்களை விலக முடியாதவாறு தாக்கும் அளவுக்கு மேம்பட்டது.

Astra Mk 3 – காண்டீபம்:

தற்போது Astra Mk 3 அல்லது ‘காண்டீபம்’ என்றழைக்கப்படும் ஏவுகணை, 340 கி.மீ. தொலைவில் இலக்குகளை நுட்பமாகத் தாக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் PL-15 (300 கி.மீ) மற்றும் அமெரிக்காவின் AIM-174 (240 கி.மீ) ஏவுகணைகளைவிட மேம்பட்டதாக பாதுகாப்பு நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படுகிறது.

காண்டீபம் ஏவுகணையின் வேகம் Mach 4.5 ஆகும், இது ஒலியின் வேகத்தை விட நான்கு மடங்கு அதிகமானது. மேலும், வெவ்வேறு உயரங்களில் உள்ள இலக்குகளை, அதற்கேற்ப துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் பொருத்துதல்:

350 ஏவுகணைகள் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் 2,971 கோடி ரூபாயுடன் பாரத் டைனமிக்ஸ் கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொன்றின் உற்பத்தி செலவு சுமார் 8 கோடியாகும், இது இறக்குமதிசெய்யும் செலவுகளைவிடக் குறைவாகும். ரஃபேல் விமானங்களில் Meteor ஏவுகணைகளுடன் காண்டீபம் பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் Su-30MKI, தேஜஸ் மற்றும் MiG-29 போர் விமானங்களிலும் இதை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சிறப்புகள்:

Solid Fuel Ducted Ramjet (SFDR) உந்துவிசை இந்த ஏவுகணையின் தனித்துவ அம்சமாகும். இந்த தொழில்நுட்பத்தில், காற்றின் உட்புகைப்பு, சுருக்கம், எரிப்பு ஆகியவை ஒருங்கிணைந்து அதிக உந்துதலை வழங்குகின்றன. இதில் சுழலும் பாகங்கள் இல்லாததால், அதிக வேகத்திலும் செயல்திறன் குறையாது.

தேடுபொறி மேம்பாடு:

சோதனைக்காக Gallium Arsenide தொழில்நுட்பம் கொண்ட Active Electronically Scanned Array தேடுபொறி பயன்படுத்தப்பட்டது. உற்பத்திக்காக அதைவிட மேம்பட்ட Gallium Nitride (GaN) தேடுபொறி பயன்படுத்தப்படும். இது உயர் வெப்பநிலையில் சிறந்த செயல்திறன் அளிக்கக்கூடியதாகும்.

ஏற்றுமதிக்கான வாய்ப்பு:

இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம், பிரேசில் ஆகிய நாடுகள் Astra ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டியுள்ளன. காண்டீபம் ஏவுகணையின் வெற்றியால் இந்தியா உலக அளவில் பாதுகாப்பு உற்பத்தி வல்லமையாக மாறியுள்ளது.

காண்டீபம் வெறும் ஒரு ஏவுகணை அல்ல; இது இந்தியா தனது போர் வான்வழி திறனை முழுமையாக கட்டமைத்ததற்கான அடையாளம். DRDO தலைவர் டாக்டர் சமீர் காமத், முழு அளவிலான உற்பத்தியை இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிறைவு செய்வதாகக் கூறியுள்ளார். ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடாக இருந்த இந்தியா, இன்று அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டிலேயே உருவாக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

Facebook Comments Box