சீனாவில், வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் HKU5-CoV-2 கண்டறியப்பட்டுள்ளது.
COVID-19 (SARS-CoV-2) வைரஸின் தாக்கம் உலகளவில் பேரழிவை ஏற்படுத்தியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு உடல்நலக்கேடுகளை சந்தித்ததுடன், மூச்சுத்திணறல் காரணமாக பலர் உயிரிழந்தனர்.
இதனால், உலகம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பணிக்குச் செல்ல முடியாத நிலை, பொருளாதாரக் குறைபாடு, சமூகத்துடனான தொடர்பின் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் உருவாகின.
காலப்போக்கில் கோவாக்சீன், கோவிஷீல்டு, ஸ்புட்னிக், பைசர் போன்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட பிறகு, நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததோடு, உயிரிழப்புகளும் குறைந்தன.
இந்த பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பு வாழ்க்கையை மக்களுக்குத் தொடர்ந்து நடத்தும் சூழல் உருவாகி வரும் நிலையில், தற்போது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, சீனாவில் வவ்வால்களில் இருந்து பரவக்கூடிய, மனிதர்களையும் பாதிக்கக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வைரஸுக்கு HKU5-CoV-2 என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்டது என்பதையும், ஆனால் இதன் பாதிப்பு மற்றும் பரவல் சக்தி COVID-19 வைரஸை விட குறைவாக இருக்கும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த வைரஸின் தன்மை, பாதிப்பு, பரவல் அளவு போன்றவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களை அறிய, விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். முன்னெச்சரிக்கையாக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆராய்ச்சியாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பு, வவ்வால்களில் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் அபாயத்தை மீண்டும் ஒளியில்கு கொண்டு வந்துள்ளது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் எவ்வாறு மாறக்கூடும் என்பதையும் விஞ்ஞானிகள் கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.