WhatsApp Channel
இம்ரான் கான் 2 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அந்த இரண்டு வேட்பு மனுக்களையும் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராகப் பதவி வகித்தார். வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை அரசு கருவூலத்திற்கு வழங்காமல் சட்டவிரோதமாக விற்ற வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அவை அரசாங்க கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை விடுவித்து உத்தரவிட்டது. ஆனால் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்டார். இதனால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருக்கும் போதே இம்ரான்கான் அடுத்த ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என அவரது பாகிஸ்தான் தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சி அறிவித்தது. அதன்படி, பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் இம்ரான் கான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இம்ரான் கானின் இரு வேட்பு மனுக்களையும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. தோஷ்கானா வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் அவரது வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post