ஹமாஸ் தலைவர்கள் முகமது சின்வார் மற்றும் முகமது சபானே ஆகியோரின் உயிரிழப்பைத் தொடர்பான 3டி வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
இதைப் பற்றி இஸ்ரேலிய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பது:
காசாவின் கான் யூனுஸ் நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனை அடியில் ஹமாஸ் அமைப்பு அமைத்திருந்த ஒரு நிலத்தடி பதுங்கு குழி கண்டறியப்பட்டது. இது அவர்களின் போர் கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு வந்தது. அந்த இடத்தைச் சேர நிலத்தடி சுரங்க வழியும் இருந்தது எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து இஸ்ரேல் ராணுவம் தீவிரவாத எதிர்ப்புச் செயல்பாட்டை வேகமாக மேற்கொண்டது.
ஹமாஸ் தலைவர்கள் தங்கியிருந்த உள்கட்டமைப்பு மிகவும் விஸ்தாரமானதும் சிக்கலானதும் ஆகும். அதை குறிவைக்கும் நடவடிக்கை தொழில்நுட்ப வளர்ச்சியும், கூட்டு புலனாய்வும் கொண்டு திட்டமிடப்பட்டதாக இருந்தது. தெற்கு கட்டளை மையம் மற்றும் விமானப்படை இணைந்து மிகத் துல்லியமான தாக்குதலை மேற்கொண்டன.
இந்த தாக்குதல், நிலத்தடி பதுங்கு குழியை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை வளாகத்திற்கு எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர்கள் உட்பட 28 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு முன் மற்றும் பின், துல்லியமான வெடிமருந்துகள், வான்வழி கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை தகவல்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
காசா பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளை ஹமாஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என்ற பெயரில் அவர்கள் பதுங்கும் இடமாக மருத்துவமனைகளை பயன்படுத்துவதாகவும் ராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தெற்கு காசாவின் ரபா பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் உணவுப் பொருள் விநியோக மையம் அருகே நேற்று நடைபெற்ற இஸ்ரேலிய ராணுவ துப்பாக்கிச் சூட்டில் 32 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் கடுமையாக காயமடைந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.