டொனால்ட் ட்ரம்ப் விதித்த இறக்குமதி வரிகளை நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடை செய்துள்ளது. மேலும், சட்டப்பூர்வமான அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதாக ட்ரம்பைப் பற்றி குற்றம்சாட்டிய கோர்ட், அதற்காக அவரை கண்டித்தது.
அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றார். அதன்பின் நடைபெற்ற தனது முதல் நாடாளுமன்ற உரையில், “அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. இதுபோல் பல நாடுகள் அதிக வரிகளை விதிக்கின்றன. இது நியாயமானதல்ல. குறிப்பாக ஆட்டோமொபைல் உற்பத்திகளுக்கு இந்தியா 100 சதவீதத்துக்கும் அதிக வரி வசூலிக்கிறது. ஐரோப்பிய யூனியன், இந்தியா, சீனா, பிரேசில், மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகள், அமெரிக்கா விதிக்கும் வரியைவிட அதிக வரிகளை வசூலிக்கின்றன. இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? எனவே, மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கின்றனவோ, அதேபோல் அமெரிக்காவும் செயல்படும்,” என்றார்.
அதன்படி ஒவ்வொரு நாட்டுக்கும் அமெரிக்கா விதிக்கும் வரியின் விவரப்பட்டியலையும் அவர் வெளியிட்டார். அதில், இந்தியாவுக்கு 27% வரி விதிக்கப்பட்டது. சீனாவுடனான வரி விவகாரம் தொடர்ந்து சிக்கலாகவே இருந்து வந்தது. ட்ரம்பின் இந்த புதிய வரி கொள்கை, உலகளவில் மந்தநிலையையும் நிச்சயமற்றதையும் ஏற்படுத்தியது. பின்னர், சீனாவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் ஒரு சராசரியான 10% அடிப்படை வரி மட்டுமே அமுல்படுத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.
இதையடுத்து, ட்ரம்ப் விதித்த வரி திட்டத்திற்கு எதிராக ஒரு வழக்கு அமெரிக்கா கூட்டாட்சி வர்த்தக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. விசாரணையின் போது, அந்த வரி திட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. அரசு தரப்பில், “இந்த வரி விதிப்பு தான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றங்களைத் தணிக்க உதவியது; அதற்கு பதிலாக சில வர்த்தக சலுகைகளை மட்டுமே வழங்கினோம்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த தர்க்கத்தை ஏற்க மறுத்தது. மேலும், அதிபரின் சட்டத்துக்கு உட்பட்ட அதிகார எல்லையை மீறி ட்ரம்ப் நடவடிக்கை எடுத்ததாக கூறி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
அதேவேளை, அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை ரத்து செய்யும் ட்ரம்ப் உத்தரவுக்கும், ஹாவர்டு பல்கலைக்கழக வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும், அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தடை விதித்திருந்தது. இப்போது இறக்குமதி வரி விஷயத்திலும் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.