பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுடன் மேலும் இணைந்து செயல்பட பாகிஸ்தான் தயாராக உள்ளது என அமெரிக்காவில் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ தெரிவித்துள்ளார். இதுவே நிலையான அமைதிக்கான ஒரே வழி என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைப் பற்றி வெளிநாடுகளில் விளக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு வாஷிங்டனில் இருந்தபோது, பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் குழு நியூயார்க்கில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வந்தது.
ஐக்கிய நாடுகளின் நியூயார்க் தலைமையகத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய பிலாவல் பூட்டோ, “பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான், இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது. இது அமைதிக்கான ஒரே வழியாகும். மக்களின் எதிர்காலத்தை பயங்கரவாதிகளின் கைகளில் விட்டுவிட முடியாது. இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையே இடைவேளையில்லாத தீர்வுகள் தேவையாகின்றன,” என்றார்.
பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஒத்துழைப்புக்காக இந்தியாவின் ரா (RAW) மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும், இது இரு நாடுகளிலும் பயங்கரவாத செயல்பாடுகளை குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட கடும் விளைவுகள் மற்றும் தற்போதைய சூழலில் அமைதியை வலியுறுத்தும் பூட்டோவின் பேச்சு, அந்த நாடு ஏற்பட்ட ஆழ்ந்த பாதிப்பை வெளிக்காட்டுகிறது.
இந்த நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பாகிஸ்தானின் 6 போர்விமானங்கள், 2 முக்கியமான விமானங்கள், 10-க்கும் மேற்பட்ட யுசிஏவி (UCAV), ஒரு C-130 போக்குவரத்து விமானம் மற்றும் பல ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக மதிப்பீடு செய்யப்படுகிறது.