அமெரிக்கா – சீனா வரி தொடர்பான பேச்சு தடைபட்ட நிலையில் ஜி ஜின்பிங், ட்ரம்ப் தொலைபேசியில் ஆலோசனை

0

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வரி தொடர்பான கலந்துரையாடல்கள் இடைநிறுத்தப்பட்டிருந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவுடன் வணிகம் மேற்கொள்ளும் நாடுகள் வரி விதிப்பில் நேர்மையற்ற முறையில் செயல்படுகின்றன என்று குற்றம் சாட்டினார். அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக அவர் விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சீன பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை ட்ரம்ப் 145 சதவீதமாக உயர்த்தினார். இதனால் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 125 சதவீதமாக உயர்த்தியது.

இதன் காரணமாக, இரு நாடுகளுக்கிடையிலான உறவு பாதிக்கப்பட்டது. வரி உயர்வினால், இரு நாடுகளிலும் உள்ள நுகர்வோர்கள் சிக்கல்களை எதிர்கொண்டனர். இந்த சூழ்நிலையை சமாளிக்க, கடந்த மாதம் 12ஆம் தேதி, வரிகளை குறைப்பதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே அமைந்தது.

வரி விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்த 90 நாட்களுக்கு சீன பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 145 சதவீத வரியை ட்ரம்ப் 30 சதவீதமாக குறைத்தார். அதேபோல் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு விதித்த வரியை 10 சதவீதமாக குறைத்தது. இருப்பினும், முரண்பாடுகள் தொடர்ந்தே இருந்தன.

சில முக்கியமான கனிமங்களை சீனா ஏற்றுமதி செய்யவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியது. அதே நேரத்தில், நவீன கணினி சிப்புகள் மற்றும் சீன மாணவர்களுக்கு வீசா வழங்குவதை அமெரிக்கா கட்டுப்படுத்தியது. இதற்கு சீன அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், வர்த்தக கலந்துரையாடல்கள் தடைபட்டன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வேறுபாடுகளை சமன் செய்யவும், வரி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும், ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் இடையே நேரடி உரையாடல் தேவைப்படுவதாக அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் அறிவித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவில், “சீன அதிபர் ஜி ஜின்பிங்கை எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் அவருடன் ஒப்பந்தம் செய்யும் பணியில் பல சிரமங்கள் உள்ளன,” எனக் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் நேற்று ஜின்பிங்குடன் தொலைபேசியில் பேசினார். இந்த தகவலை சீன வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், வெள்ளை மாளிகை இதுகுறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here