ஈரான் உட்பட 12 நாடுகளுக்குப் பயணத் தடையை அமெரிக்கா விதித்திருப்பது, அந்த நாட்டின் இனவெறி உணர்வுகளின் வெளிப்பாடாகும் என ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் இத்தடை நடவடிக்கையை அறிமுகப்படுத்தினார். தற்போது இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர், 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் உத்தரவை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவுக்கு அவர் கடந்த புதன்கிழமை கையெழுத்திட்டார்.
தடைசெய்யப்பட்ட நாடுகள்: ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா பயணத் தடையை விதித்துள்ளது.
மேலும், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நாடுகள் “அதிக அபாயம் ஏற்படுத்தக்கூடியவை” எனவும், எனினும் அமெரிக்கா நுழைவுத் தடை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பயணத் தடை உத்தரவு வரும் திங்கள் கிழமை நள்ளிரவு 12.01 மணி முதல் செயல்படுத்தப்படும். இதற்குப் பதிலளித்த ஈரான், இந்த முடிவை கடுமையாக எதிர்த்து பேசியுள்ளது. ஈரானின் வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு ஈரானிய விவகார இயக்குநர் ஜெனரல் அலிரேசா ஹஷேமி-ராஜா கூறியதாவது:
“இந்தத் தீர்மானம், அமெரிக்க கொள்கையாளர்கள் மத்தியில் நிலவும் இனவெறியும் மேலாதிக்கவாத மனப்பான்மையின் சான்றாகும். இது ஈரானும், இஸ்லாமிய மக்களும் எதிர்கொள்ளும் தீவிர எதிர்ப்பு நோக்கை காட்டுகிறது. இது சர்வதேச சட்ட விதிகளை மீறுகிறது. ஒருவரது நாட்டும் மதமும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் பயண உரிமையை பறிக்கும் செயல் இது. இந்த தடை இடப்படுவதற்கு சரியான விளக்கம் வழங்கப்படவில்லை என்பதே, அமெரிக்க அரசின் பொறுப்பின்மை மற்றும் பாகுபாடுகளைக் காட்டுகிறது” என அவர் தெரிவித்தார்.
1979-ம் ஆண்டில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் தங்களுடைய தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டித்துவிட்டன. அதன் பின்னர், இந்த இரு நாடுகளுக்கிடையேயான உறவு எப்போதும் பதற்றமாகவே இருந்து வருகிறது. வெளிநாடுகளில் வாழும் ஈரானியர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர். ஈரான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, 2020-ஆம் ஆண்டில் சுமார் 15 லட்சம் ஈரானியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.