ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் – டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட கடும் எச்சரிக்கை

0

ஈரானில் இஸ்ரேலின் தாக்குதல் – டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட கடும் எச்சரிக்கை

ஈரானின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ள சூழலில், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தாக்குதல்கள் இன்னும் கடுமையானவையாக இருக்கக்கூடும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, விரைவில் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என அவர் ஈரானை வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகம் ட்ரூத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அவர் கூறியதாவது:

“ஈரானுக்கு ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பை பலமுறை வழங்கினேன். ‘இதைக் கையெழுத்து செய்யுங்கள்’ என்று பலத்த வார்த்தைகளில் கேட்டேன். ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும், அதில் வெற்றி பெற முடியவில்லை. இது அவர்கள் நினைத்ததையும் எதிர்பார்த்ததையும் விட மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் எச்சரித்தேன்.

அமெரிக்கா உலகில் மிக சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்ரேலிடம் அவை அதிகளவில் உள்ளன. மேலும் பல வரும். அவற்றைப் பயன்படுத்தும் திறமை அவர்களுக்கு தெரியும்.

ஈரானில் சில கடுமையான கருத்துள்ளவர்கள் தைரியமாகப் பேசினர். ஆனால் நிஜத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. தற்போது அவர்கள் பலர் உயிரிழந்துவிட்டனர். நிலைமை இன்னும் மோசமாகும். ஈரான் ஏற்கனவே பலத்த உயிரிழப்பையும் சேதத்தையும் சந்தித்துள்ளது. ஆனால் எதிர்வரும் தாக்குதல்கள் இன்னும் கொடூரமானவையாக இருக்கும். ஆகவே இந்த வன்முறையை நிறுத்த விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

ஈரானிய பேரரசாக அழைக்கப்பட்டதை பாதுகாக்க, ஒப்பந்தம் தேவை. ஒப்பந்தம் செய்தால் இனி உயிரிழப்போ அழிவோ இருக்காது. காலம் கழிப்பதற்கு முன் அதைப் செய்யுங்கள். கடவுள் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்!” என்றார் ட்ரம்ப்.

இந்நிலையில், இன்று (ஜூன் 13) ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் குடியிருப்புப் பகுதிகள் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இதையடுத்து ஈரான் தனது வான்வெளியை மூடியது. இதனை ஈரானின் அரசு ஊடகம் ஐஆர்என்ஏ உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொஸாட், ஈரானில் தாக்குதலை நடத்தியுள்ளது என்றும், இதில் முக்கிய ராணுவ தளபதிகள், வீரர்கள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவ அதிகாரியான ஹுசைன் சலாமி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது மிகவும் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இந்த தாக்குதலை இஸ்ரேல் தன்னிச்சையாக நடத்தியதாகவும், ஐநா-வில் உள்ள இஸ்ரேல் தூதர் டேனி டானன் உறுதியளித்துள்ளார். தாக்கப்பட்ட அணுசக்தி நிலையத்திலிருந்து கதிர்வீச்சு வெளிவரவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here