ஈரான்-இஸ்ரேல் மோதல்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை அறிவிப்பு
ஈரானின் பதிலடி ஏவுகணைத் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்திய தூதரகம் விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதே நேரத்தில், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள், பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. ஈரானிய வான்வெளியில் நிலவும் நிலைமையால், அவ்வழியாக செல்லும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்திய தூதரகம் தனது எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்) பக்கத்தில், “பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இஸ்ரேலிய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கடைபிடித்து, தேவையற்ற பயணங்களை தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். அவசரநிலையில் தூதரகத்தின் உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்” என அறிவுறுத்தியுள்ளது.
தூதரகத்தின் அவசர எண்கள்:
- +972 54-7520711
- +972 54-3278392
- மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in
விமான சேவைகளில் பாதிப்பு
ஈரானிய வான்வெளி மூடப்பட்டதால், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாவது:
“சில விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. பயண நிலைமைகளை http://airindia.com இல் பார்க்கலாம் அல்லது 011 69329333, 011 69329999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.”
இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளதாவது:
“வான்வெளி மூடலால் சில விமானங்கள் தாமதமாகலாம். பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன், எங்கள் வலைத்தளம் அல்லது செயலியில் விமான நிலையை சரிபார்க்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.
மோதலின் பின்னணி
இஸ்ரேல், ஈரான் மீது அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதைக் காரணமாகக் கூறி, 200 போர் விமானங்களை அனுப்பி 100க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவீச்சை மேற்கொண்டது. இதில் 78 பேர் உயிரிழந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும்படி ஈரான், இஸ்ரேலில் ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் ராணுவம் கூறியதாவது, “ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால், தெஹ்ரான் மீது கடும் பதிலடி அளிக்கப்படும்” என எச்சரித்துள்ளது.