இஸ்ரேலின் ‘அயன் டோம்’ பாதுகாப்பு அமைப்பை மீறிய ஈரான் தாக்குதல் – வான்வழி போர் தீவிரம்
இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பான ‘அயன் டோம்’ (Iron Dome) பற்றிய முக்கிய அம்சங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் கவனிக்கத்தக்கதாகும்.
ஈரான் நாட்டின் அணு திட்டங்கள் மற்றும் ராணுவத் தளங்களை குறிவைத்து, இஸ்ரேல் “ஆபரேஷன் ரைசிங் லயன்” என்ற பெயரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. இதில் 78 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 320 பேர் படுகாயமடைந்ததாகவும், ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதுவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய அணு உள்கட்டமைப்புகள், நடான்ஸ், ஃபோர்டோ, இஸ்ஃபஹான் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் நடான்ஸ் பகுதியில் உள்ள செறிவூட்டும் நிலையம், 60% யுரேனியம் செறிவூட்டும் திறன் கொண்டதாகும்.
இதற்குப் பதிலடி அளிக்கும் வகையில், ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” எனும் நடவடிக்கையின் கீழ் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை வலுவான ஏவுகணைகளால் தாக்கியது. இதில் ஒருவர் உயிரிழந்தார், 34 பேர் காயமடைந்தனர். ரிஷோன் லெசியோனில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர்.
இரு நாடுகளும் தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரான் நடத்திய இந்த தாக்குதலின்போது, இஸ்ரேல் தனது வான்வழி பாதுகாப்பு அமைப்பான “அயன் டோம்” மூலம் பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவித்தது.
‘அயன் டோம்’ என்னும் பாதுகாப்பு அமைப்பின் செயல்முறை
இந்த அமைப்பில் ரேடார், கட்டுப்பாட்டு மையம் மற்றும் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அடங்கும். எதிரியின் ஏவுகணைகளை ரேடார் மூலம் கண்டறிந்து, தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து உத்தரவு வந்தவுடன், கவச வாகனத்தில் உள்ள ஏவுகணைகள் பறந்து சென்று எதிரியின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழிக்கின்றன.
‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகள் சுமார் 200 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கும் திறன் கொண்டவை. இது அமெரிக்காவின் நிதியுதவியுடன் 2010-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதனை பாலஸ்தீனின் ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்தும், இஸ்ரேலை பாதுகாக்கப் பயன்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், ‘ஏரோ’ எனப்படும் பாதுகாப்பு அமைப்பு நீண்டதூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்க்கும் திறன் கொண்டது. ஈரான் தாக்குதலில் இந்த அமைப்பும் பல ஏவுகணைகளை அழித்தது. இதேபோல், ‘டேவிட்’ஸ் ஸ்லிங்’ எனும் பாதுகாப்பு அமைப்பும் நடுத்தர தூர ஏவுகணைகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அமெரிக்காவின் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்டவையாகும்.
இஸ்ரேல் அரசு தெரிவித்தது: “நம் பாதுகாப்பு அமைப்புகள் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியாவிட்டாலும், பெரும் சேதத்தையும் உயிரிழப்பையும் தவிர்க்கும் அளவிற்கு எப்போதும் நம் நாட்டை காப்பாற்றி வருகின்றன” என்று கூறியுள்ளது.